வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பூச்சு விழுந்து 2 குழந்தைகள் படுகாயம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பூச்சு விழுந்து 2 குழந்தைகள் படுகாயம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 Jan 2021 1:26 AM GMT (Updated: 10 Jan 2021 1:26 AM GMT)

நச்சலூர் அருகே வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பூச்சு விழுந்து 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .

நச்சலூர்,

கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 28). இந்த தம்பதிக்கு தனிஷ் (8 மாதம்), கோபிகா ஸ்ரீ (7), நிதிஷா (4) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சுரேஷ் மற்றும் உமா மகேஸ்வரி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். தனிஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் அருகில் தரையில் கோபிகாஸ்ரீயும் தூங்கியதாக கூறப்படுகிறது.

நிதிஷா வெளியே விளையாட சென்றுவிட்டார். எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது.

இதில் 2 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்தபெற்றோர்கள் கதறிஅழுதனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம ்பக்கத்தினர் ஓடிவந்து, இடிபாடுகளில் சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம் பெருகமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தமிழ்ச்சோலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததின் காரணமாக மேற் கூரை பகுதி ஊறியதால் இச்சம்பவம் நடந்ததாககூறினர்.

Next Story