பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் பாரம்பரியமிக்க மண்பானைகள்


பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் பாரம்பரியமிக்க மண்பானைகள்
x
தினத்தந்தி 10 Jan 2021 4:06 PM GMT (Updated: 10 Jan 2021 4:06 PM GMT)

மதுரை அருகே பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் பாரம்பரியமிக்க மண்பானைகள் தயாராகி வருகின்றன.

மதுரை,

தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. பொதுமக்களும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வர தொடங்கி விட்டன. அதேபோல் பொங்கல் பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற கிடாரிப்பட்டி பகுதியில் பொங்கல் பானைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சிறியது முதல் பெரியது வரை என பல்வேறு அளவுகளில் மண் பானைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 2 மாதமாக பாரம்பரிய மிக்க மண்பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மண் பானைகளை ஆர்டர் முறையில் தயார் செய்து கொடுத்து வருகின்றனர். ஆனால் தொடர் மழை காரணமாக தற்போது ஆர்டர் குறைந்து விட்டதால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ரெங்கராஜ் கூறும்போது,

எங்கள் கிராமத்தில் உள்ள பல குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு ஆர்டர் குறைந்துவிட்டது. இதுதவிர கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்ததால் மண்பாண்ட தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பொங்கல் பானைகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சிலர் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். பானை விலை அதன் அளவை பொறுத்து ரூ.80 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

தமிழக மக்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் பொங்கல் தினத்தன்று மட்டுமாவது வீடுதோறும் தவறாமல் மண் பானையில் பொங்கல் வைப்பதை வழக்கமாக்கினால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

Next Story