சேலம் மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


சேலம் மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 19 Jan 2021 3:38 AM GMT (Updated: 19 Jan 2021 3:38 AM GMT)

சேலம் மாவட்ட எல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம், 

எடப்பாடி சட்டமன்ற தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி கிராமத்தில் நேற்று தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார். பின்னர் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் விலகி தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சேலம் மத்திய, சேலம் மேற்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது கட்சியில் புதியதாக இணைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இனணந்தவர்களை வரவேற்கிறேன்

பின்னர் அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்கிறேன். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் இந்த ஆட்சியின் சாதனைகளை கூறி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் தி.மு.க.வை கொச்சை படுத்தி பேசுவதை தான் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இது மட்டுமல்ல கிராம சபை கூட்டங்களை ரத்து செய்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதனை எல்லாம் தகர்த்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

உற்சாக வரவேற்பு

முன்னதாக தர்மபுரியில் இருந்து எடப்பாடி தொகுதிக்கு வரும் வழியில் சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, மக்கள் தலையா? கடல் அலையா? என்று தெரியாத வண்ணம் மக்கள் திரண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் வாழ்ந்த இந்த மண்ணில் இருந்து சொல்கிறேன். நிச்சயம் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஓமலூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமரன், பாலசுப்பிரமணியம், ரமேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மெய்யனூர் பகுதி செயலாளர் ஆ.சரவணன் தலைமையில் மோட்டார் சைக்கிளில் சென்று தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் சென்று மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

Next Story