கூத்தாநல்லூர் அருகே நர்சிடம் கத்தியை காட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் கடை உரிமையாளர் கைது


கூத்தாநல்லூர் அருகே நர்சிடம் கத்தியை காட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் கடை உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2021 8:55 PM GMT (Updated: 20 Jan 2021 8:55 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே நர்சிடம் கத்தியை காட்டி ரூ.1 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் எள்ளுக்கொல்லை காலனி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தாமரைச்செல்வன் (வயது37). இவர் வடபாதிமங்கலத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இவர் மீது வடபாதிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தன்னை சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு அரசு அலுவலகங்களுக்கு சென்று மிரட்டி பணம் கேட்பதும், கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து பதிவிடுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்து வந்தன.

நர்சுக்கு மிரட்டல்

இந்த நிலையில் சம்பவத்தன்று வடபாதிமங்கலம் எள்ளுக்கொல்லை காலனி தெருவை சேர்ந்த கிராம சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வரும் நாடீஸ்வரி (43) என்பவர், வடபாதிமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை தாமரைச்செல்வன் வழிமறித்து ரூ.1 லட்சம் கேட்டுள்ளார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் பணியில் முறைகேடு செய்ததாக சமூக வலைதளங்களில் கருத்து பரப்பி விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்றும் கத்தியை காட்டி மிரட்டி நாடீஸ்வரியிடம் ஆபாசமாக பேசி உள்ளார். இது குறித்து நாடீஸ்வரி வடபாதிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைச்செல்வனை கைது செய்தனர்.

Next Story