சுங்கான்கடை அருகே ஆட்டோ ஷோரூமிற்குள் லாரி புகுந்தது; 2 பேர் படுகாயம் 7 ஆட்டோக்கள் சேதம்


சுங்கான்கடை அருகே ஆட்டோ ஷோரூமிற்குள் லாரி புகுந்தது; 2 பேர் படுகாயம் 7 ஆட்டோக்கள் சேதம்
x
தினத்தந்தி 21 Jan 2021 9:30 PM GMT (Updated: 21 Jan 2021 6:21 PM GMT)

சுங்கான்கடை அருகே தாறுமாறாக ஓடிய லாரி ஆட்டோ ஷோரூமிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 7 ஆட்டோக்கள் சேதமடைந்தன. 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

திங்கள்சந்தை, 

சுங்கான்கடை அருகே தாறுமாறாக ஓடிய லாரி ஆட்டோ ஷோரூமிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 7 ஆட்டோக்கள் சேதமடைந்தன. 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.


மதுரையில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை உசிலம்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 27) ஓட்டினார். அவருடன் அதே ஊரை சேர்ந்த முத்துராமன் (30) என்பவர் இருந்தார். 

இந்தநிலையில் லாரி குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே களியங்காடு என்ற இடத்தில் சென்ற போது, முன்னால் சென்ற வாகனத்தை லாரி முந்த முயன்றதாக தெரிகிறது.


அப்போது எதிர்பாராதவிதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையோர ஆட்டோ ஷோரூமிற்குள் புகுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஷோரூமில் நிறுத்தியிருந்த 7 ஆட்டோக்கள் சேதமடைந்தன. மேலும் லாரியில் இருந்த கணேசன், முத்துராமன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷோரூம் முன்பு ஊழியர்கள் வழக்கமாக நின்று கொண்டிருப்பார்களாம். அதிர்ஷ்டவசமாக விபத்து நேரிட்ட போது அங்கு அவர்கள் நிற்கவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story