தர்மபுரியில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தலைமையில் பெண்கள் பங்கேற்றனர்


தர்மபுரியில், ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் தலைமையில் பெண்கள் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 22 Jan 2021 4:03 PM GMT (Updated: 22 Jan 2021 4:03 PM GMT)

தர்மபுரியில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலத்தில் கலெக்டர் கார்த்திகா தலைமையில் பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் 32- வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சாலை பாதுகாப்பு, விபத்துகள் தடுப்பு, போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுதல் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இருசக்கர வாகன ஊர்வலம் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலெக்டர் கார்த்திகா தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்பட 500 பெண்கள் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த இரு சக்கர வாகன ஊர்வலம் தர்மபுரி- சேலம் சாலையில் நடைபெற்றது. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணியாமல் இருப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முனுசாமி, மணிமாறன், சிவகுமார், ராஜ்குமார் உள்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story