தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் போலீஸ் நிலையம் தேர்வு


தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் போலீஸ் நிலையம் தேர்வு
x
தினத்தந்தி 22 Jan 2021 11:48 PM GMT (Updated: 22 Jan 2021 11:49 PM GMT)

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டதற்கு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.

டவுன் போலீஸ் நிலையம் தேர்வு
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. பொதுமக்களை வரவேற்பது, சுற்றுப்புறத்தை அழகுப்படுத்தி தூய்மையாக வைத்திருப்பது, வழக்குகளை விரைந்து முடிப்பது உள்ளிட்டவைகளுக்கு மதிப்பெண் கொடுத்து சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் போலீஸ் நிலையத்துக்கு முதல்-அமைச்சர் விருது வழங்குவார்.

கடந்த 2019-ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 558 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. 2-ம் இடத்தை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையமும், 3-வது இடத்தை சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையமும் பிடித்தது.

போலீஸ் கமிஷனர் பாராட்டு
சேலம் டவுன் போலீஸ் நிலையம் முதலிடம் பிடித்தது குறித்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் வாக்கிடாக்கி மூலம் தெரிவித்து பாராட்டினார். மேலும் அவர் இந்த விருது பெற காரணமாக இருந்த அனைத்து போலீசாரையும் பாராட்டினார். இதுபோன்று அனைத்து போலீஸ் நிலையங்களும் விருது பெற முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
ஏற்கனவே அகில இந்திய அளவில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் 2-ம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story