சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு


சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 26 Jan 2021 2:10 AM GMT (Updated: 26 Jan 2021 2:16 AM GMT)

டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு

சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து சேலத்திலும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இருந்து  50 டிராக்டர்கள், 200 மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தோம். 

ஆனால் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை (இன்று) டிராக்டர்களை வரிசையாக நிறுத்தி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினர்.

கடும் நடவடிக்கை
இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் கொரோனா தொற்று காரணமாக பேரணி, ஊர்வலம் நடத்த கலெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். எனவே சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்தினால், டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story