தென்காசியில் குடியரசு தினவிழா- கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றினார்


தென்காசியில் குடியரசு தினவிழா- கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2021 1:10 AM GMT (Updated: 27 Jan 2021 1:14 AM GMT)

தென்காசியில் நடந்த குடியரசு தினவிழாவில், கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றினார்.

தென்காசி:

தென்காசியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக்கொடி ஏற்றினார்.

கலெக்டர் கொடியேற்றினார்

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவானது. இந்த மாவட்டத்தின் 2-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் தேசிய கொடி ஏற்றினார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை மாவட்ட கலெக்டர் ஏற்றுக்கொண்டார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் இருந்தார். திறந்த ஜீப்பில் இருவரும் மைதானத்தில் சுற்றி வந்தனர்.

பதக்கங்கள் அணிவிப்பு

இதையடுத்து விழா மேடைக்கு வந்த கலெக்டர் சமீரன் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து ஒரு புறாவையும் வானில் பறக்க விட்டார். இதன்பிறகு சிறப்பாக சேவை செய்த காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் 40 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் மாவட்ட கலெக்டரால் அணிவிக்கப்பட்டது.

சான்றிதழ்கள்

மேலும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல்துறையில் 39 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் 17 பேருக்கும் சுகாதார நலப்பணிகள் (தென்காசி) 55 பேருக்கும், சங்கரன்கோவிலில் 42 பேருக்கும், மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத்தில் 6 பேருக்கும், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் 11 பேருக்கும், ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 4 பேருக்கும், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் 6 பேருக்கும், தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 4 பேருக்கும், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 7 பேருக்கும், இந்து சமய அறநிலையத் துறையில் ஒருவருக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 28 பேருக்கும், மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் 8 பேருக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஒருவருக்கும், தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் 2 பேருக்கும், தென்காசி தாலுகா அலுவலகத்தில் 4 பேருக்கும், ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் 2 பேருக்கும், செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒருவருக்கும், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஒருவருக்கும், சிவகிரி தாலுகா அலுவலகத்தில் 2 பேருக்கும், நில அளவைத் துறையில் 4 பேருக்கும், கால்நடை பராமரிப்பு துறையில் 5 பேருக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் 29 பேருக்கும், தென்காசி முதன்மை கல்வி அலுவலகத்தில் 2 பேருக்கும், வேளாண்மை துறையில் 13 பேருக்கும், வேளாண்மை பொறியியல் துறையில் ஒருவருக்கும், பொதுப்பணித் துறையில் 3 பேருக்கும், தோட்டக்கலைத் துறையில் 16 பேருக்கும், கருவூலத் துறையில் 4 பேருக்கும், தென்காசி நகராட்சி அலுவலகத்தில் 3 பேருக்கும், 

செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 5 பேருக்கும், புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் 3 பேருக்கும், கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் 3 பேருக்கும், சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் 5 பேருக்கும், தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் ஒருவருக்கும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) 3 பேருக்கும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) 2 பேருக்கும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 3 பேருக்கும், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறையில் 6 பேருக்கும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் 18 பேருக்கும் உட்பட மொத்தம் 372 பேருக்கு இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகள்

சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் உட்பட பல்வேறு அரசு துறைகள் சார்பில் 144 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 16 ஆயிரத்து 781 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, தென்காசி உதவி கலெக்டர் (பொறுப்பு) ஷீலா, சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருக செல்வி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், உதவி அலுவலர் லெனின் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் காளிராஜ், பட்டதாரி ஆசிரியர் பிச்சையா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

Next Story