திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.28 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்


திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.28 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2021 5:55 AM GMT (Updated: 27 Jan 2021 5:55 AM GMT)

திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உடனிருந்தார். பின்னர் அமைதி, சமாதானம் நிலவும் வகையில் வெள்ளை புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 போலீசார் மற்றும் 108 அரசு துறை அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்களை கலெக்டர் சாந்தா வழங்கினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகள்

மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 7 பேருக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரம், வருவாய்த்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியாக ஒருவருக்கு ரூ.3 லட்சம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.43 ஆயிரத்து 790 மதிப்பில் தையல் எந்திரம், 5 பேருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் சலவை பெட்டியும், வேளாண்மைத்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.78 ஆயிரத்து 436 மதிப்பிலான தார்பாய், தெளிப்புநீர் பாசன கருவி உள்ளிட்ட வேளாண் உபகரணம் என மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 89 ஆயிரத்து 614 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள் ரத்து

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் பாலசந்திரன், புண்ணியகோட்டி, மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமரன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபாநிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா நோய் தொற்று காரணமாக விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Next Story