தைப்பூசத்தையொட்டி கடலூரில் உள்ள வள்ளலார் கோவில்களில் ஜோதி தரிசன விழா


தைப்பூசத்தையொட்டி கடலூரில் உள்ள வள்ளலார் கோவில்களில் ஜோதி தரிசன விழா
x
தினத்தந்தி 28 Jan 2021 5:01 PM GMT (Updated: 28 Jan 2021 5:01 PM GMT)

தைப்பூசத்தையொட்டி கடலூரில் உள்ள வள்ளலார் கோவில்களில் நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கடலூர், 

கடலூர் பீச்ரோட்டில் வள்ளலார் இளைப்பாறிய வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வள்ளலார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் தியானமும், தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் கொடியேற்றுதல் நிகழ்ச்சி முடிந்ததும், காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி ஆகிய 3 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

முன்னதாக 8.30 மணிக்கு ஜோதி வழிபாடு, 9.30 மணியளவில் திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சி, திருஅருட்பா பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

இதேபோல் கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள வள்ளலார் கோவிலில் ஜோதிதரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு அகவல் பாராணயமும், மதியம் 12 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. 

இதேபோல் கடலூரில் பல இடங்களில் உ ள்ள வள்ளலார் கோவில்களில் இன்று சிறப்பு பூஜையுடன் ஜோதி தரிசனமும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம்

சிதம்பரம் விபீஷ்ணபுரம் லலிதாம்பாள் நகரில் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை அகவல் வாசித்தல், சிறப்பு சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஞானசபை நிர்வாக தலைவர் மாரிமுத்து, செயல் தலைவர் ஜெகஜோதி நாதன் மற்றும் சிதம்பரம் விபீஷ்ணபுரம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story