பெரம்பலூா் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெரம்பலூா் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 28 Jan 2021 8:15 PM GMT (Updated: 28 Jan 2021 8:15 PM GMT)

பெரம்பலூா் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் 41-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலையில் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாலமுருகனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலை மூலவர், தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story