பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா


பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா
x
தினத்தந்தி 28 Jan 2021 9:21 PM GMT (Updated: 28 Jan 2021 9:21 PM GMT)

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழா
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு, மலைக்கோவிலில் இருந்து மலையடிவாரத்தில் உள்ள நகரீசுவரமுடையார் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட முருகபெருமானுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 9-ம் நாளான நேற்று முன்தினம் மாலையில் தேரோட்டம் நடந்தது.

தீர்த்தவாரி
விழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் மலையடிவாரத்தில் உள்ள நகரீசுவரமுடையார் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) முருகபெருமான் மலைக்கோவிலில்  எழுந்தருளுகிறார். ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.

தோரணமலை முருகன் கோவில்
தென்காசி - கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், 10 மணிக்கு ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 11 மணிக்கு மலை உச்சியில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள சப்தகன்னியர்கள், சரஸ்வதி, லட்சுமி, சிவன், கிருஷ்ணர் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்பட்டது.

மதியம் 2 மணி முதல் திருச்சி துறையூர் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் குழுவினர் செய்திருந்தனர்.

Next Story