கல்லூரி பேராசிரியை வீட்டில் நகை திருட்டு


கல்லூரி பேராசிரியை வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 29 Jan 2021 2:31 PM GMT (Updated: 29 Jan 2021 2:33 PM GMT)

அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியை வீட்டில் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அருப்புகோட்டை

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் உஜ்ஜிசாமி கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் கலுவனச்சேரியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (46). தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று  இரவு ரவிச்சந்திரன் அருகில் உள்ள அவரின் தாயார் வீட்டுக்கு படுக்க சென்று விட்டார். 

நகை திருட்டு 

இவரது மனைவி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேர் வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து, வீட்டுக்குள் புகுந்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தைத் திருடி விட்டு வெளியே செல்ல முயன்றனர். 
அப்போது சத்தம் கேட்டு எழுந்த ஜெயலட்சுமி மர்மநபர்களை பார்த்தவுடன் சத்தம் போட்டார். ஆனால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டனர். 

பொதுமக்கள் பீதி 

இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான கைரேகைகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை  வலைவீசி தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Next Story