நாகையில், பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்


நாகையில், பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2021 5:19 PM GMT (Updated: 29 Jan 2021 5:19 PM GMT)

வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி நாகையில், பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி நாகையில், பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

மனு கொடுக்கும் போராட்டம் 

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் நாகையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் வேத முகுந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜசிம்மன், புதுவை மாவட்ட அமைப்பு செயலாளர் காளி, மாநில இளைஞரணி துணை செயலாளர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு துணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 2 தொகுப்புகளாக பிரித்து வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஊர்வலம் 

இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

முன்னதாக தெத்தி செல்லும் பிரிவு சாலையில் இருந்து பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் வந்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story