சரக்கு ஆட்டோ தீயில் எரிந்து நாசம்


சரக்கு ஆட்டோ தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 4 Feb 2021 6:47 AM GMT (Updated: 4 Feb 2021 6:47 AM GMT)

சரக்கு ஆட்டோ தீயில் எரிந்து நாசமானது.

நொய்யல்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). சரக்கு ஆட்டோ உரிமையாளர். இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் சாமான்களை வாங்கி வருவதற்காக சரக்கு ஆட்டோவை எடுத்துக்கொண்டு பொத்தனூரில் இருந்து கரூர் நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புகளூர் நான்கு ரோட்டில் ராம் நகர் பிரிவு அருகே சரக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் இருந்து கரும்புகை கிளம்பியது. புகை அதிகளவு வரவே சரவணன் ஆட்டோவை நிறுத்தி விட்டு வேகமாக கீழே இறங்கினார். அப்போது சரக்கு ஆட்டோ குபீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோவில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது.


Next Story