தாளவாடி அருகே வனச்சாலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்


தாளவாடி அருகே வனச்சாலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2021 12:29 AM GMT (Updated: 5 Feb 2021 12:29 AM GMT)

தாளவாடி அருகே வனச்சாலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் வனவிலங்குகள் அங்குள்ள வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம். 

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிஅளவில் ஆசனூரை சேர்ந்த 3 பேர் ஒரு காரில் தாளவாடியில் இருந்து ஆசனூருக்கு சென்று கொண்டிருந்தனர். கும்டாபுரம் அருகே சென்றபோது, வனச்சாலை ஓரமாக சிறுத்தை ஒன்று கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருந்ததை காரில் சென்றவர்கள் நேரில் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காரில் இருந்தபடி அந்த சிறுத்தையை தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர். 15 நிமிடம் வரை சாலையோரம் உட்கார்ந்திருந்த சிறுத்தை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்டாபுரம் அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை நடமாடியதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

Next Story