துப்பட்டா அறுந்ததால் தூக்குப்போட்ட தொழிலாளி கீழே விழுந்து இறந்தார்- சாவில் சந்தேகம் என போலீசில் அண்ணன் புகார்


துப்பட்டா அறுந்ததால் தூக்குப்போட்ட தொழிலாளி கீழே விழுந்து இறந்தார்- சாவில் சந்தேகம் என போலீசில் அண்ணன் புகார்
x
தினத்தந்தி 6 Feb 2021 11:16 PM GMT (Updated: 6 Feb 2021 11:16 PM GMT)

துப்பட்டா அறுந்ததால் தூக்குப்போட்ட தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் சந்தேகம் என அண்ணன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அறச்சலூர்
துப்பட்டா அறுந்ததால் தூக்குப்போட்ட தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் சந்தேகம் என அண்ணன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கீழே விழுந்தார்
அறச்சலூர் அருகே உள்ள அவல்பூந்துறை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. அவருடைய மனைவி பரிமளா (39). இவர்களுக்கு ஆஸ்நாத்(12) என்ற மகன் உள்ளார். ஏசுராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 5 மாதங்களாக ஏசுராஜன், அவருடைய அண்ணன் மணிமாறன் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். அதன்பின்னர் சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் ஏசுராஜ் தன்னுடைய வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் கழித்து அவர் படுக்கை அறைக்கு சென்றுவிட்டார்.
துப்பட்டா அறுந்தது
பின்னர் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்து மின்விசிறி கொக்கியில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டுள்ளார். அப்போது  துப்பட்டா அறுந்ததால் ஏசுராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
சத்தம் கேட்டு பரிமளா அங்கு சென்று பார்த்தபோது ஏசுராஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் உறவினர்கள் அங்கு சென்று, ஏசுராஜை பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஏசுராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் சந்தேகம்
இந்தநிலையில் ஏசுராஜின் அண்ணன் மணிமாறன் அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர், எனது தம்பியின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் காயம் உள்ளது. அதனால் அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story