வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா அடுத்த மாதம் 21-ந் தேதி நடக்கிறது


வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா அடுத்த மாதம் 21-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 11 Feb 2021 12:58 AM GMT (Updated: 11 Feb 2021 12:58 AM GMT)

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி நடக்கிறது.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோவில் பிரசித்திப்பெற்ற கோவில்களுள் ஒன்றாகும்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழா பிரசித்திப்பெற்ற விழாக்களில் ஒன்றாகும். குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் வேண்டியும், நோய் குணமாக வேண்டியும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலில் நடைபெறும் பாடை காவடி திருவிழாவின்போது நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தேதி குறிக்கும் நிகழ்ச்சி

கடந்த ஆண்டு (2020) கொரோனா நோய் பரவல் காரணமாக அரசின் உத்தரவுப்படி இங்கு பாடை காவடி திருவிழா நடைபெறவில்லை. ஆவணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறக்கூடிய தெப்ப திருவிழாவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருவிழாவுக்காக தேதி குறிக்கும் நிகழ்ச்சி கோவில் செயல் அலுவலர் ரமேஷ் தலைமையில் கோவிலில் நடந்தது.

புஷ்ப பல்லக்கு

இதில் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 7-ந் தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 14-ந் தேதி 2-ம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடை காவடி திருவிழாவை மார்ச் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டது.

28-ந் தேதி புஷ்ப பல்லக்கு, ஏப்ரல் மாதம் 4-ந் தேதி 4-ம் ஞாயிறு விழாவும், 11-ந் தேதி கடை ஞாயிறு விழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் ஆய்வாளர் தமிழ்மணி, மேலாளர் சீனிவாசன், தலைமை பூசாரி செல்வம் மற்றும் கிராம மக்கள், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story