தை அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


தை அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Feb 2021 6:10 PM GMT (Updated: 11 Feb 2021 6:10 PM GMT)

தை அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நொய்யல்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
நொய்யல் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், புன்னம் அங்காளம்மன் கோவில், தவுட்டுபாளையம் மாரியம்மன் கோவில், அத்திப்பாளையம் சின்ன பொன்னாச்சி அம்மன் கோவில், திருக்காடுதுறை மாரியம்மன் கோவில், நஞ்சை புகளூர் மேகபாலீஸ்வரர் கோவில், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தோகைமலை
தோகைமலை கழுகூர் ஊராட்சி கஸ்பா அருகே பிரசித்தி பெற்ற சந்தனகருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. கழுகூர் ஊராட்சியை சேர்ந்த 18 பட்டி கிராமமக்களுக்கு சொந்தமான ஊர்குலதெய்வமாக இக்கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில் தை அமாவாசையையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை பூஜைகள் செய்த பக்தர்கள் கிடா, சேவல் வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதேபோன்று ஆர்டிமலை ஊராட்சி கரையூரான் கிராமத்தில் உள்ள நீலமேகம் கருப்பண்ணசுவாமி கோவிலில் பக்தர்கள் கிடா வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வேலாயுதம்பாளையம்  
வேலாயுதம்பாளையம் அருகே தளவாப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பச்சை பட்டுத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதேபோல் காகிதபுரம் துர்க்கை அம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், கடம்பங்குறிச்சி மாரியம்மன் கோவில், மண்மங்கலம் புதுகாளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளியணை
வெள்ளியணை பச்சப்பட்டியில் உள்ள பழமையான பால ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு புனித நீர், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு 108 ஜிலேபியிலான மாலை மற்றும் வடைமாலை சார்த்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 
இதேபோல் வெள்ளியணையில் உள்ள கருமாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், முருகன் கோவில், மதுரை வீரன் கோவில், மூக்கணாங்குறிச்சி கிராமம் நத்த மேட்டில் உள்ள வீரபாண்டிஸ்வரர் கோவில், ஜெகதாபியில் உள்ள மாரியம்மன் கோவில், முருகன் கோவில் செல்லாண்டிபட்டியில் உள்ள முனியப்பன் கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story