தனியார் நர்சிங் கல்லூரியில் நீதிபதிகள் திடீர் ஆய்வு


தனியார் நர்சிங் கல்லூரியில் நீதிபதிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Feb 2021 7:32 PM GMT (Updated: 11 Feb 2021 7:32 PM GMT)

விடுதியில் மின்வசதி இல்லை என்று வந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரையில் தனியார் நர்சிங் கல்லூரியில் நீதிபதிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

மானாமதுரை,

விடுதியில் மின்வசதி இல்லை என்று வந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரையில் தனியார் நர்சிங் கல்லூரியில் நீதிபதிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

புகார்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி ஒருவர் தமிழக முதல்-அமைச்சர், கவர்னர், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனுக்கள் அனுப்பி உள்ளார்.  அந்த புகார் மனுவில், கல்லூரி விடுதியில் மின்சார வசதி இல்லை. தினமும் சில மணி நேரம் மட்டுமே ஜெனரேட்டரில் மின்சாரம் கொடுப்பதாகவும் மற்ற நேரங்களில் விடுதியில் மின்சாரம் இல்லாமல் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும், கல்வி கட்டணம் செலுத்தியும் சரிவர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும், போதிய விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நீதிபதிகள் ஆய்வு

இந்த புகாரின் அடிப்படையில் நேற்று காரைக்குடி நீதிபதி பாலமுருகன், இளையான்குடி நீதிபதி சுனில் ராஜா, மானாமதுரை தாசில்தார் மாணிக்கவாசகம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று மாலை சம்பந்தப்பட்ட நர்சிங் கல்லூரிக்கு திடீரென சென்றனர். அங்கு கல்லூரியின் வகுப்பறை, கழிப்பறை, விடுதிகளில் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, கொரோனா தொற்றுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்கு வந்ததாகவும், வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

Next Story