சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சண்டி ஹோமம்


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சண்டி ஹோமம்
x
தினத்தந்தி 12 Feb 2021 7:47 PM GMT (Updated: 12 Feb 2021 7:47 PM GMT)

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சண்டி ஹோமம் நடைபெற்றது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், மேலும் விசேஷ நாட்களிலும் நடை திறப்பது வழக்கம். நேற்று தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மதுரகாளியம்மன் மகா அபிஷேக அறக்கட்டளை சார்பில், நேற்று 47 -வது ஆண்டு மகா அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கோவிலில் நேற்று காலை ஸப்தஸதி பாராயணத்தை தொடர்ந்து சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வஸூர்த்தாரை ஹோமம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெரம்பலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. மேலும் அடுத்த மாதம் (மார்ச்) 11-ந்தேதி மகா சிவராத்திரி அன்று இரவு 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி அம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story