திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 18 Feb 2021 6:10 AM GMT (Updated: 18 Feb 2021 6:10 AM GMT)

திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்போரூர், 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 11 மாதங்களாக திருப்போரூர் முருகன் கோவிலில் எந்த ஒரு திருவிழாவும் விமரிசையாக நடத்தப்படாமல் இருந்தது. ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதித்தது.

மாசி மாத பிரம்மோற்சவ விழா பாதுகாப்புடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து திருவிழா நடத்த அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முடிவெடுக்கப்பட்டது.

கொடியேற்றத்துடன் தொடக்கம்

இந்த நிலையில் நேற்று திருப்போரூர் முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. இதயவர்மன், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வருகிற 23-ந்தேதி காலை 10 மணிக்கு திருத்தேர் திருவிழா நடக்கிறது. முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார், 26-ந்தேதி தேதி இரவு தெப்பத்திருவிழா, 28-ந்தேதி திருக்கல்யாண விழா போன்றவை நடைபெறுகிறது.

Next Story