மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்: கிணற்றில் குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை


மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்: கிணற்றில் குதித்து எலக்ட்ரீசியன் தற்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2021 10:52 PM GMT (Updated: 19 Feb 2021 10:52 PM GMT)

மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த எலக்ட்ரீசியன் பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

எலக்ட்ரீசியன்

வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 40). எலக்ட்ரிசீயனாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

மேலும் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவியிடம் தகராறு செய்தார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த அவர், வீட்டின் அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்து விட்டார். இதில் நீரில் மூழ்கி தத்தளித்த அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இறந்த நிலையில் மீட்பு

இதையடுத்து உடனே தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்து கிணற்றுக்குள் இறங்கிய மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மோகனின் உடலை இறந்த நிலையில் மீட்டனர்.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Next Story