மாமல்லபுரத்தில் நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


மாமல்லபுரத்தில் நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2021 12:09 AM GMT (Updated: 20 Feb 2021 12:09 AM GMT)

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மாமல்லபுரம் நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவீன பஸ் நிலையம்

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பல்லவர் கால குடைவரை மண்டபங்கள், கோவில்கள், சிற்பங்கள் உலகபுகழ் பெற்ற பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இங்கு இன்னும் நவீன பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. தற்போது இங்குள்ள தலசயன பெருமாள் கோவில் எதிரே குறுகிய இடத்தில் திறந்தவெளி பகுதியே பஸ் நிலையமாக 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

தினமும் இந்த குறுகிய பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு, தனியார், மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன. ஒரே நேரத்தில் பல பஸ்கள் வருவதால் இங்கு நிறுத்த இடமில்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் இங்கு அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த குறுகிய பஸ் நிலையத்தில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. மேலும் சுற்றுலா வரும் பெண்கள் தங்கள் அவசர தேவைக்கு கழிப்பிடம் செல்ல கூட வசதி இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுலா பகுதிக்கேற்ப நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்தது. மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் எதிரில், இ.சி.ஆர். சாலையை ஓட்டி உள்ள 6 ஏக்கர் இடத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறையிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

மண் பரிசோதனை

அதற்காக வரைபடங்களும் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக்குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டது. மேலும் புதுநகர் வளர்ச்சி குழும நிர்வாகம் பஸ் நிலைய பணிக்காக வருவாய்த்துறை மூலம் 6 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தது. மண் பரிசோதனையும் செய்யப்பட்டு, பஸ் நிலையத்திற்கு உகந்த இடம் என்று சான்றிதழும் பெறப்பட்டது. திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டதோடு சரி. பின்னர் பல ஆண்டுகளாக அரசு இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் உள்ளது. ஆனால் அதிகாரிகள் அடிக்கடி மாமல்லபுரம் வந்து பஸ் நிலையம் அமைப்பதற்காக ஆய்வு செய்கின்றனரே தவிர பணிகள் தொடங்குவதற்கான எந்தவித ஏற்பாடுகளையும் செய்யவில்லை. பஸ் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 ஏக்கர் நிலமும் தற்போது சீமைகருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. தற்போதுள்ள குறுகிய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்த போதுமான இடவசதி இல்லாததால் அங்கு நிற்கும் பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசியும், மோதியும் நிற்கவேண்டிய அவல நிலை உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்த நிழற்குடை பகுதியில் 10 பேர் அமரும் வகையில் 5 இருக்கைகளே உள்ளது. அங்கு பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதியும் இல்லை. மேலும் நிரந்தர பஸ் நிலையம் இல்லாததால் சென்னையில் இருந்து இ.சி.ஆர். சாலையில் புதுச்சேரிக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் வருவது கிடையாது. அங்குள்ள புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்று விடுகிறது.

போதிய இடமில்லை

பயணிகள் இதுகுறித்து கண்டக்டரிடம் கேட்டால் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்த போதிய இடமில்லை. அதனால் அங்கு பஸ் செல்லாது என்று காரணம் கூறி தட்டி கழிக்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மாமல்லபுரம் நகருக்குள் வரவேண்டிய அவலநிலை உள்ளது.

எனவே கிடப்பில் உள்ள மாமல்லபுரம் புதிய நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

 


Next Story