சாலையோர ஓடையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி


சாலையோர ஓடையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 Feb 2021 7:37 PM GMT (Updated: 20 Feb 2021 7:37 PM GMT)

பெரம்பலூர் அருகே சாலையோர ஓடையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.

பெரம்பலூர்:

நண்பர்கள்
பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் செல்வக்குமார் மகன் சங்கீத்ராஜா(வயது 28), ராஜேந்திரன் மகன் சரவணன் (30), கணேசன் மகன் விஜய் (25). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையத்துக்கு சென்றனர்.
பின்னர் நள்ளிரவில் அவர்கள், டி.களத்தூரில் இருந்து மங்கூன் வழியாக சத்திரமனை நோக்கி வந்தனர். மோட்டார் சைக்கிளை சங்கீத்ராஜா ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர். சத்திரமனை அருகே வந்தபோது சங்கீத்ராஜாவின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள ஓடையில் கவிழ்ந்தது.
சாவு
இதில் படுகாயமடைந்த சங்கீத்ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன், விஜய் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சரவணன், விஜயை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார், சங்கீத்ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story