சேலத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை


சேலத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2021 12:36 AM GMT (Updated: 21 Feb 2021 12:39 AM GMT)

சேலத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சூரமங்கலம்,

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 78). இவர் முருங்கப்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது முத்துசாமிக்கு ரூ.20 லட்சம் கிடைத்தது. இதை கொண்டு அவர் முருகன் கோவில் ஒன்றை கட்டினார். இந்த நிலையில் அவருக்கும், உறவினர்கள் சிலருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துசாமி மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முத்துசாமி தனது தோட்டத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு விறகு கட்டைகளை அடுக்கி வைத்து அதன் மீதும் தன் மீதும் மண்எண்ணெயை ஊற்றினார். இதையடுத்து அவர் விறகு கட்டையில் படுத்து கொண்டு தீயை பற்ற வைத்தார்.

இதில் உடல் கருகிய அவர் வலி தாங்க முடியாமல் அங்கும், இங்குமாக உருண்டார். சிறிது நேரத்தில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் முத்துசாமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story