பணியின் போது தவறு செய்ததால் அதிகாரிகள் ‘மெமோ’: மனமுடைந்த மாநகர பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


பணியின் போது தவறு செய்ததால் அதிகாரிகள் ‘மெமோ’: மனமுடைந்த மாநகர பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2021 1:03 PM GMT (Updated: 21 Feb 2021 1:03 PM GMT)

பணியின்போது ஏற்பட்ட தவறால் அதிகாரிகள் ‘மெமோ’ வழங்கியதையடுத்து, மனமுடைந்த மாநகர பஸ் கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் வ.உசி.நகர், 4-வது தெருவில் வசித்து வந்தவர் இளவரசன் (வயது 42). இவர் தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்குட்பட்ட 56-டி மணலி பஸ்சில் கடந்த 14 ஆண்டுகளாக கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கீதா பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் இவர் பணியில் இருந்த போது பயணிக்கு பயணச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தவறு காரணமாக அதிகாரியிடமிருந்து மெமோ வழங்கப்பட்டதாக தெரிகிறது.அன்று முதல் அதிகாரிகள் தன்னை தொந்தரவு செய்வதாக அடிக்கடி மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.

தற்கொலை

இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மனைவியும் அவருக்கு அடிக்கடி ஆறுதல் கூறி வேலைக்கு அனுப்பி உள்ளார். இதற்கிடையே வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர், நேற்று அதிகாலை வீட்டில் இருந்த பழைய பொருட்கள் அடைத்து வைக்கப்பட்ட அறையில் தனது மனைவியின் புடவையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story