திருத்தணி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


திருத்தணி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2021 1:48 PM GMT (Updated: 21 Feb 2021 1:48 PM GMT)

திருத்தணி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் என்ற ஜெகதீசன் (வயது 26). தனியார் பால் வேனில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருவாலங்காடு சாலையில் வசித்து வரும் கலைவாணி (23) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. கலைவாணி கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெகதீசனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்தனர்.

தூக்கில் தொங்கினார்

ஒரு சில நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகதீசன் கலைவாணி வீட்டுக்கு சென்றார். அப்போது கலைவாணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த ஜெகதீசன் கள்ளக்காதலி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்ததும் அவரது பெற்றோரும் உறவினர்களும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் தங்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story