நாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் குளித்தலையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


நாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் குளித்தலையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2021 8:04 PM GMT (Updated: 21 Feb 2021 8:04 PM GMT)

நாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் என்று குளித்தலையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

குளித்தலை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கரூர் வந்தார். முன்னதாக குளித்தலை சுங்ககேட் பகுதியில் திறந்த வேனில் நின்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
 தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்டாலின் பொய்யாகவே பேசி வருகிறார். அவருக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
 தி.மு.க. குடும்ப கட்சி. தி.மு.க.விற்காக பாடுபட்டவர்கள் பலர் இருந்தும் அவர்களை பிரசாரத்திற்கு அனுப்புவதில்லை. உதயநிதிக்கும், தி.மு.க.விற்கும் என்ன சம்பந்தம். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் முதல்-அமைச்சர் ஆகலாம். ஆனால், தி.மு.க.வில் வர முடியாது.
குறைகள் தீர்க்கப்பட்டதா?
குளித்தலை சட்டமன்ற தொகுதி வேளாண் பெருமக்கள், தொழிலாளிகள் நிறைந்த பகுதி. விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் நன்றாக தெரியும். தி.மு.க. தலைவர் தற்போது பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டி வீட்டில் வைத்துவிட்டு 3 மாதங்களுக்கு பிறகு முதல்-அமைச்சராகி திறப்பேன் என்று கூறுகிறார். இப்படிபட்ட தலைவரை எங்கேயாவது பார்த்ததுண்டா? 2019-ல் ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். குறைகள் தீர்க்கப்பட்டதா? அந்த மனுக்கள் என்ன ஆயிற்று. அப்போது வாங்கிய மனுக்கள் போலவே இப்போது வாங்கி வரும் மனுக்களும் இருக்கும். அ.தி.மு.க. அப்படி அல்ல எதை சொல்கிறோமோ அதை செய்கின்ற கட்சி. 2006-ல் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிலம் அற்ற விவசாயிகளுக்கு நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை. நிலத்தை கொடுக்காவிட்டால் பராவாயில்லை. பிடுங்காமல் இருந்தாலே போதும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம் அ.தி.மு.க. தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக குளித்தலை சுங்ககேட் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள் மனு
 குளித்தலைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பெரியார் நகர் பகுதி மக்கள் மனு அளித்தனர். அதில், குளித்தலை பெரியார் நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தூய்மை பாரத திட்டத்தில் நுண் உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனை மக்கள் குடியிருப்பு இல்லாத இடத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Next Story