தர்பூசணி செடிகள் பராமரிப்பில் விவசாயிகள் தீவிரம்


தர்பூசணி செடிகள் பராமரிப்பில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 Feb 2021 5:58 PM GMT (Updated: 22 Feb 2021 5:58 PM GMT)

உடுமலை எலையமுத்தூர் பகுதியில் தர்பூசணி செடிகள் பராமரிப்பில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வெப்பத்தின் தாக்குதல்

தளி:
உடுமலை எலையமுத்தூர் பகுதியில் தர்பூசணி செடிகள் பராமரிப்பில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வெப்பத்தின் தாக்குதல்
இயற்கையை பாதுகாப்பது பருவநிலையும் சுற்றுச்சூழலும். அதுபோல கோடைகாலத்தில் உடலை காப்பது பழச்சாறும், பழவகைகளும். பனிக்காலம் முடிவடைந்து இன்னும் ஒரு சில மாதங்களில் கோடை காலம் தொடங்க உள்ளது. அதில் கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரத்தின் தாக்குதலை சமாளிப்பதற்கு பொதுமக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. 
வெப்பத்தின் தாக்குதலால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுப்பதற்கு தர்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை, திராட்சை உள்ளிட்ட பழவகைகள் உதவி புரிகிறது. இதில் 90 சதவீத நீர் இருப்பை கொண்டுள்ள தர்பூசணி பழமே அனைவரின் விருப்பமாக உள்ளது. பூமியில் பாய்ச்ச படுகின்ற தண்ணீரை சத்துகளாக மாற்றி ஒட்டுமொத்தமாக சேமித்து வைத்து மக்களுக்கு அளிப்பதில் தர்பூசணியின் பங்கு மகத்தானது. 
தர்பூசணி
இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட இதில் தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், இரும்புசத்து உள்ளது. இதனால் இதயம் முதல் சிறுநீரகம் வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சாலை ஓரங்களில் புளியமரத்து நிழலில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள தர்பூசணி  துண்டுகளை சுவைக்காமல் அதனை கடந்து செல்ல மாட்டார்கள். காரணம் என்னவென்றால் உப்பும் மிளகாய்த் தூளும் கலந்த தர்பூசணியின் சுவையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடவு செய்யப்படுகின்ற தர்பூசணி கோடைகால வெப்பத்தை தணிப்பதற்கு தயாராகிவிடுகிறது. தர்பூசணி சாகுபடியால் சில்லரை வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை பெறுகின்றனர். இதனால் கோடைகால சாகுபடியில் முதலிடம் வகிப்பது தர்பூசணி தான். 
பராமரிப்பில் தீவிரம்
அந்த வகையில் உடுமலை சுற்றுப்புறப்பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் நிலப்போர்வை மற்றும் திறந்தவெளியில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதை கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் தீவிரமாக பராமரித்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவமழையும் கைகொடுத்து உதவியதால் அணைகள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் இருப்பும் நிலையாக உள்ளது.
இதன் காரணமாக தர்பூசணி செடிகள் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. இதனால் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் விளைச்சல் கிடைப்பதற்கான சூழல் நிலவுவதால் விவசாயிகள் தர்பூசணி செடிகளை தீவிரமாக பராமரித்து வருகின்றனர்.

Next Story