விராலிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்


விராலிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்
x

விராலிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி நேற்று தீர்த்தக்குடம் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது.

விராலிமலை, பிப்.23-
விராலிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி நேற்று தீர்த்தக்குடம் யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது.
முருகன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அவருக்கு அஷ்டமாசித்தி வழங்கிய இடமாகவும் விராலிமலை விளங்கி வருகிறது. இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழாவிற்கான தொடக்கப் பணிகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டு விமான கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தீர்த்தக்குடம்
தொடர்ந்து சிவாச்சாரியார் தீர்த்த குடத்தை ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டு வந்தார். பின்னர் மாலை 6 மணி அளவில் கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம் மற்றும் முதற்கால யாக பூஜை நடைபெற்றது. இதில் திருப்பணி குழுவினர் ராமசந்திரன், பூபாலன், அபூர்வாபாஸ்கர், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி அளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. மாலை ஆச்சார்ய விஷேச சந்தி, பாவனாபிஷேகத் துடன் 3-ம் கால யாக பூஜை தொடங்கி அதன்பிறகு மீன லக்கனத்தில் முருகனுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம்
 நாளை (புதன்கிழமை) 4-ம் கால யாகசாலை பூஜை அதிகாலையில் தொடங்குகிறது. தொடர்ந்து. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பரிவார கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு ஆச்சார்ய விசேஷ சந்தி, பாவனாபிஷேகம் நடக்கிறது. மாலையில் 5-ம்கால யாகசாலை பூஜை நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடத்தப்படுகிறது. முன்னதாக 6-ம்கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து நாடி சந்தானம், யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடக்கிறது. அதன்பின் காலை 8.30 மணிக்கு சுவாமியின் விமான ராஜகோபுர கலச மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் 9 மணிக்கு மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மாலையில் சுவாமிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு இரவு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

Next Story