உயிர் வாழ தகுதியில்லை என சான்றளியுங்கள்


உயிர் வாழ தகுதியில்லை என சான்றளியுங்கள்
x
தினத்தந்தி 22 Feb 2021 7:07 PM GMT (Updated: 22 Feb 2021 7:07 PM GMT)

கணவனை இழந்து 8 ஆண்டுகளாக மகள்களுடன் தவித்து வரும் விதவைப்பெண் தொழில் தொடங்க உதவி கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் நானும் என் குழந்தைகளும் உயிர் வாழ தகுதி இல்லாதவர்கள் என சான்று அளிக்குமாறு கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

விருதுநகர்,பிப்.
கணவனை இழந்து 8 ஆண்டுகளாக மகள்களுடன் தவித்து வரும் விதவைப்பெண் தொழில் தொடங்க உதவி கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் நானும் என் குழந்தைகளும் உயிர் வாழ தகுதி இல்லாதவர்கள் என சான்று அளிக்குமாறு கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
விதவைப் பெண்
சிவகாசி அருகே உள்ள ஊராம்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற விதவைப் பெண் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு பட்டாசு ஆலை நடத்திய எனது கணவர் சத்தியமூர்த்தி இறந்து விட்டார். எனக்கு பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் 2 மகள்கள் உள்ளனர். நான் கணவர் இறந்த ஆண்டு முதல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறேன்.
இந்த நிலையில் நான் எனது கணவரின் தொழிலை தொடர தொழில் கடன் கேட்டு மனு கொடுத்து வருகிறேன். இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு வேலைக்காகவும் மனு கொடுத்துள்ளேன். இதுவரை எந்த பலனும் இல்லை. நான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளேன். என்னுடைய மனுக்கள் அனைத்தும் பெறப்பட்டு பதில் கடிதம் வந்துள்ளது. ஆனால் எனது வாழ்வாதாரத்திற்கு எந்த வழியும் கிடைக்கவில்லை.
சான்று வழங்குங்கள்
எனது வீட்டை ஈடு வைத்து தொழில் கடன் வழங்க அதிகாரிகள் பரிந்துரைத்தும் வங்கி அதிகாரிகள் கடன் வழங்க மறுக்கும் நிலையே உள்ளது. இதனால் எனக்கும், என் மகள்களுக்கும் வாழ்வதற்கான வழி தெரியவில்லை. எனவே எனக்கும், என் மகள்களுக்கும் உயிர் வாழ்வதற்கான தகுதி இல்லை என்ற சான்று வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் உடனடியாக எனக்கு வாழ்வதற்கான வழி வகை செய்ய வேண்டும். எத்தனை வருடங்கள் போராடி கொண்டு இருக்க முடியும். எனவே நானும் எனது மகள்களும் உயிர் வாழ தகுதி இல்லாதவர்கள்.
எனக்கு உடனடியாக பதில் வேண்டும். இல்லை என்றால் உயிர் வாழ தகுதி இல்லை என்று சான்றளிக்க வேண்டும். என் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யாத, பெண் என்றும் பாராமல் என்னை அலைக்கழித்த அரசு அதிகாரிகளிடம் வாழ்விற்காக போராடி விட்டேன். இதுவே என் கடைசி போராட்டம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Next Story