மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 22 Feb 2021 7:27 PM GMT (Updated: 22 Feb 2021 7:27 PM GMT)

நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

நொய்யல்
நொய்யல் அருகே கொடுமுடி- பரமத்தி வேலூர் நெடுஞ் சாலையில் உள்ள  அண்ணாநகரை சேர்ந்தவர் இளங்கோவன். தையல் தொழிலாளி. நேற்று காலை இளங்கோவனின் மகன் காது குத்து விழாவிற்கு சீர் கொண்டு செல்வதற்காக இளங்கோவன் அவரது தாய் ராமாயி (70) மற்றும் உறவினர்கள் அனைவரும் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ரோட்டின் இடது புறமாக ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே திசையில் பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ராமாயி மீது மோதியது. இதில் ராமாயி படுகாயமடைந்தார். 
இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்அவர்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார், விபத்தை ஏற்படுத்திய குறுக்குச் சாலையைச் சேர்ந்த சக்கரபாணி (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காது குத்து விழா நின்றுபோனது.  
சிறுவன் காயம்
தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதி வெள்ள பட்டியை சேர்ந்த சிவபெருமாள். இவரது மகன் கிரிதரன் (4). இவர் வெள்ளப்பட்டி ரோட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, வெள்ளப்பட்டி கிராமம் கொட்டாம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கிரிதரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் கிரிதரன் படுகாயமடைந்தான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக பஞ்சப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story