கடலூர் மாவட்டத்தில் 702 வாக்குச்சாவடி மையங்கள் பிரிப்பு


கடலூர் மாவட்டத்தில்   702 வாக்குச்சாவடி மையங்கள் பிரிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 8:02 PM GMT (Updated: 22 Feb 2021 8:02 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 702 வாக்குச்சாவடி மையங்கள் பிரிப்பு

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் பிரித்து, துணை வாக்குச் சாவடி மையம் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசுகையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் இணைக்கப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கை உச்சவரம்பை 1,500-ல் இருந்து 1,050 ஆக குறைக்க உத்தேசித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, துணை வாக்குப்பதிவு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோட்ட அலுவலர்களால் துணை வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு 17.2.2021 மற்றும் 19.2.2021 ஆகிய தேதிகளில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு, முன்மொழிவுகளை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.கடந்த முறை நடந்த கூட்டத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு கலெக்டர் வராமல், அரசியல் கட்சி பிரதிநிதிகளை நீண்ட நேரம் காக்க வைத்ததால், நேற்று நடந்த கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

Next Story