ஆலங்குடி அருகே 11 காளைகள் பங்கேற்ற வடமாடு ஜல்லிக்கட்டு


ஆலங்குடி அருகே 11 காளைகள் பங்கேற்ற வடமாடு ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 22 Feb 2021 9:21 PM GMT (Updated: 22 Feb 2021 9:21 PM GMT)

ஆலங்குடி அருகே 11 காளைகள் பங்கேற்ற வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஆலங்குடி
சந்தனக்காப்பு
ஆலங்குடி அருகே மாங்கோட்டையில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு சந்தனக்காப்பு சாற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவையொட்டி நேற்று வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. 
மருத்துவ பரிசோதனை
இந்த காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தகுதியான 11 காளைகளை மட்டுமே வடமாடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதித்தனர். இதேபோல் 90 மாடுபிடி வீரர்கள் வடமாடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்து கொண்டனர். அவர்களுக்கும் மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு தகுதியானவர்கள் மட்டுமே காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு திடலின் மத்தியில் பெரிய கயிற்றால் மாடு கட்டப்பட்டு இருந்தது. அந்த கயிற்றுக்கு உட்பட்ட சுற்றளவில் மாடுகள் சுற்றிவந்தன. ஒவ்வொரு காளைகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் ஒருசில காளைகள் வீரர்களிடம் பிடிப்பட்டது. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டி சென்றது. இதில் காளைகள் முட்டியதில் 5 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பரிசுகள்
வெற்றிபெற்ற காளைகளுக்கும், காளைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அடக்கிய வீரர்களுக்கும் விழா கமிட்டியரால் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வடமாடு ஜல்லிக்கட்டைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராமானோர் வந்து பார்வையிட்டனர். விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருப்பதற்காக ஆலங்குடி மற்றும் சம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story