பொள்ளாச்சியில் மூதாட்டிகளிடம் 11 பவுன் நகை பறிப்பு


பொள்ளாச்சியில் மூதாட்டிகளிடம் 11 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 11:23 PM GMT (Updated: 22 Feb 2021 11:26 PM GMT)

பொள்ளாச்சியில் மூதாட்டிகளிடம் 11 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சியில் மூதாட்டிகளிடம் 11 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சீதா (வயது 64). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 2 பேர் சீதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் 5 பவுன் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. 

மேலும் இந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பார்வதி (70). இவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவிலில்  நடந்த கும்பாபிஷேக விழாவிற்கு வந்தனர். அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் பார்வதியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொள்ளாச்சியில் அடுத்தடுத்து மூதாட்டிகளிடம் 11 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story