திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.


திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு  2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.
x
தினத்தந்தி 23 Feb 2021 11:34 AM GMT (Updated: 23 Feb 2021 11:34 AM GMT)

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். 

அங்கன்வாடி ஊழியர்கள்

திருப்பூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கியது.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கடந்த 38 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதிய குழுவில் அரசு ஊழியராக்குவேன் என்று உறுதிமொழி அளித்தார். ஆனால் அ.தி.மு.க. அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அதை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்லடம் ரோட்டில் சாலையோரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இரவில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே தூங்கினார்கள்.

2-வது நாளாக போராட்டம்

இதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் பாக்கியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காலையிலும் அங்கேயே சமையல் செய்து அங்கன்வாடி ஊழியர்கள் சாப்பிட்டு போராட்டத்தை தொடங்கினர். மதியமும் கொளுத்தும் வெயிலில் அங்கேயே அமர்ந்து இருந்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்கள். போராட்டத்தைத் தொடர்ந்து தெற்கு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story