தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் 590 பேர் கைது


தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் 590 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 1:04 PM GMT (Updated: 23 Feb 2021 1:04 PM GMT)

தூத்துக்குடியில் நேற்று கேரிக்கைகளை வலியுறுத்தி் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 590 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று கேரிக்கைகளை வலியுறுத்தி் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 590 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
சத்துணவு ஊழியர்களை முழுநேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை ரோட்டில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்சேகர் கோரிக்கையை விளக்கி பேசினார். போராட்டத்தை மாநில துணைத்தலைவர் தமிழரசன் தொடங்கி வைத்து பேசினார்.
கைது
போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் செந்தூர்ராஜன், மாநில துணை தலைவர் அண்ணாமலை பரமசிவன், முன்னாள் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 590 பேரை கைது செய்தனர்.

Next Story