அ.தி.மு.க. கவுன்சிலர் தலை துண்டித்து கொலை அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது போலீஸ் நிலையம் முற்றுகை பரபரப்பு


அ.தி.மு.க. கவுன்சிலர் தலை துண்டித்து கொலை அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது போலீஸ் நிலையம் முற்றுகை பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 5:16 PM GMT (Updated: 23 Feb 2021 5:16 PM GMT)

முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய தாமதமானதாக கூறி உறவினர்கள்-ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை:-
முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய தாமதமானதாக கூறி உறவினர்கள்-ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
அ.தி.மு.க. கவுன்சிலர் தலை துண்டித்து கொைல
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 38). அ.தி்.மு.க. ஒன்றிய கவுன்சிலரான இவர், நேற்று முன்தினம் முத்துப்பேட்டை அருகே தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. 
இதனைத்தொடர்ந்து திருச்சி மண்டல ஐ.ஜி. ஜெயராம், தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா ஆகியோர் முத்துப்பேட்டைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு அங்கேயே முகாமிட்டனர். 
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய காலதாமதமானதாக கூறி அதிருப்தியடைந்த ராஜேசின் உறவினர்கள், ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் மாலை மன்னார்குடி ரோடு, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கொலையாளிகளை கைது செய்யும்வரை ராஜேசின் உடலை வாங்க மாட்டோம் என கூறினர். 
நேற்று 2-வது நாளாக முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை ராஜேசின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கொலையாளிகளை கைது செய்யக்கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்களை தனிமையில் வைத்து விசாரித்து வருவதாகவும் ராேஜசின் உறவினர்களி்டம் தெரிவித்தனர். 
உடலை பெற்றுக்கொள்ள சம்மதம்
இதை ஏற்காத ராஜேசின் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள கொைலயாளிகளின் போட்டோவை காட்டினால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறினர். 
இதனையடுத்து போலீசார் கைதான கொலையாளிகளின் போட்டோவை ஒரு சிலரிடம் காட்டினர். இதைத்தொடர்ந்து ராஜேசின் உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். 
ஆம்புலன்சை தடுத்து நிறுத்தினர்
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து ராஜேஷ் உடல் நேற்று மதியம் ஆம்புலன்சில் முத்துப்பேட்டைக்கு எடுத்து வரப்பட்டது. ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் முத்துப்பேட்டை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வந்தபோது வாகனத்தை ராஜேசின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். 
பின்னர் ராஜேஷ் உடலை ஆலங்காடு பகுதியில் இருந்து முத்துப்பேட்டை கடைத்தெரு வழியாக ஊர்வலமாக சுமந்து எடுத்து செல்ல போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் போலீசார் ராேஜஷ் ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு  மறுப்பு தெரிவித்தனர். 
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து ஆம்புலன்சிலேயே ராஜேஷ் உடலை அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டவாறு ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஆலங்காடு பைபாஸ் ரவுண்டானா அருகே ராஜேசின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் வந்தபோது ஊர்வலத்தை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தடுத்து நிறுத்தி முத்துப்பேட்டை கடைத்தெரு வழியாக உடலை எடுத்து செல்ல அனுமதி மறுத்தார். 
இதனால் ரவுண்டானாவில் போலீசாரை கண்டித்து சாலைமறியல்  நடந்தது. அப்போது போலீசாருக்கும், ராஜேசின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பான சூழ்நிலை உருவானது. 
நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஐ.ஜி. ஜெயராம் சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு கடைத்தெரு வழியாக உடலை எடுத்து செல்ல அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து முத்துப்பேட்டை பழைய புதிய பஸ் நிலையம், ஆசாத் நகர், கடைத்தெரு, மன்னை சாலை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசாா் குவிக்கப்பட்டு மேற்கண்ட பகுதிகள் வழியாக கோவிலூர் மணல்மேட்டில் உள்ள ராஜேஷ் வீட்டை அவரது உடல் சென்றடைந்தது.அங்கு அவரது உடலை பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் இறுதி சடங்குகளுக்கு பின் ராஜேஷ் உடல் அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேசின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது
இறுதி சடங்கில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நடராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ராம்பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
ராஜேஷ் கொலை தொடர்பாக அவரது உறவினர் ஆலங்காடு பாறைக்குளம் தெருவை சேர்ந்த சந்திரமோகன்(35) முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் 10 பேர் மீது புகார் அளித்தார். 
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அ.ம.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கோவிலூர் ஜெகன்(48), யோகேஸ்வரன்(32), அருண்குமார்(30), அஜித்(30), செந்தில்ராஜா(40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
அ.தி.மு.க. கவுன்சிலர் கொலையால் முத்துப்பேட்டையில் பதற்றம் நீடிப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story