இலவச பட்டா நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமிக்க முயற்சி பொதுமக்கள் புகார்


இலவச பட்டா நிலத்திற்கு செல்லும்  வழித்தடத்தை ஆக்கிரமிக்க முயற்சி பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 23 Feb 2021 5:22 PM GMT (Updated: 23 Feb 2021 5:22 PM GMT)

பெருமாநல்லூர் அருகே இலவச பட்டா நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து வேலி போட முயன்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகே இலவச பட்டா நிலத்திற்கு செல்லும் வழித்தடத்தை ஆக்கிரமித்து வேலி போட முயன்றதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இலவச பட்டா நிலம் 

பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் ஊராட்சி, நியூ குருவாயூரப்பன் நகர் பகுதியில் 29 பேருக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்டது.  இந்த இடத்திற்கு செல்ல வேண்டிய பிரதான வழிதடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வேலி போட முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் முள்வேலி போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர். 
இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

புகார் மனு பெற  மறுப்பு 

அப்போது “பட்டா கொடுத்த இடமானது வருவாய்த்துறையில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும், இட அளவீடு நடத்தப்பட்ட பின்னரே அரசு கொடுத்த இலவச பட்டாவிற்கு இடமுண்டா, இல்லையா? என்ற விவரம் தெரிய வரும்”என்றனர். இதனை கேட்ட, பட்டா வாங்கிய பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுக்க முயன்ற போது அவர்கள் மனுவினை பெற மறுத்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 
இதுகுறித்து தகவலறிய காளிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ரவிக்குமாரை, தொடர்பு கொண்டு கேட்டபோது “ இந்த பிரச்சினை தொடர்பாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story