சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்


சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 7:12 PM GMT (Updated: 23 Feb 2021 7:12 PM GMT)

நாகர்கோவிலில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 253 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 253 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்துணவு ஊழியர்கள்
சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி முறையான ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் குமரி மாவட்ட மையம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். அனுசியா, கவிதா, ஜோண்சி ஜெபகுமாரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச்செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.
253 பேர் கைது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் லீடன்ஸ்டோன், பொருளாளர் சுபின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் இந்திரா மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெபமணி நன்றி கூறினார்.
பின்னர் சத்துணவு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதில் 148 பெண்கள் உள்பட 253 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களில் பெரும்பாலானோர் கருப்பு சேலை அணிந்து பங்கேற்றனர்.

Next Story