சத்துணவு ஊழியர்கள் மறியல்; 288 பேர் கைது


சத்துணவு ஊழியர்கள் மறியல்; 288 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 7:12 PM GMT (Updated: 23 Feb 2021 7:12 PM GMT)

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 288 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், பிப்.
ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 288 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோரிக்கைகள்
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது
அதன்படி ராமநாதபுரத்தில் யூனியன் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கண்ணகி, துணைத்தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அம்ரிதா வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகநாததுரை தொடக்க உரையாற்றினார்.
பிற அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை ஆதரித்து பேசினர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- 
தேர்தல் பணி புறக்கணிப்பு
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு செவி சாய்க்காமல் உள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சங்க பொதுக்குழுவை கூட்டி தேர்தல் பணிகளை புறக்கணிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம். என்று கூறினார். இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த 268 பெண்கள் உள்பட 288 பேரை போலீசார் கைது செய்தனர்.  இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story