தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து


தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 23 Feb 2021 9:08 PM GMT (Updated: 23 Feb 2021 9:08 PM GMT)

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து

பெரம்பலூர்
பெரம்பலூர் சுந்தர் நகரைச் சேர்ந்த தன்னார்வலர் அருணா செந்தில்குமார்: தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வித் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் பாடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைத்து, காய்கறி விலை, போக்குவரத்து கட்டணம் இவற்றை குறைத்திருந்தால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயனுள்ள வகையில் இருந்திருக்கும். பட்ஜெட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு குறைக்கப்படாத நிலை வருத்தமளிக்கிறது. பெரம்பலூரை சேர்ந்த முரளிதரன்: விவசாயிகளுக்கான பயிர்க்கடன், வேளாண்மை கடன் தள்ளுபடி ஆகியவற்றை அறிவித்து அதற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது சிறந்த பட்ஜெட் ஆகும். பள்ளிக்கல்வித் துறைக்கும் அதிக நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. விபத்து காப்பீடு, நெல்லுக்கான நிவாரணம் உயர்வு, மின்சார பஸ்கள் அறிமுகம், வேளாண் பொருட்கள் கொள்முதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.
அரியலூர் மின் நகரை சேர்ந்த இயற்கை விவசாயி ரா.சம்பத்: கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஏறத்தாழ 3 மாதங்கள் பூக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் கன மழை பெய்ததால் பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் இழந்தது ஏராளம். இந்த நிலையில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் மற்றும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்துள்ள தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இயற்கை பாதிப்புகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் தமிழக அரசு பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அதற்குரிய நிதியை தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளமைக்கு பெரும்பான்மை விவசாயிகள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செயல் ஏற்கனவே மனம் உடைந்த விவசாயிகளுக்கு பெரிதும் ஆதரவளிப்பதாக உள்ளது.

Next Story