நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்


நாமக்கல்லில்  அங்கன்வாடி பணியாளர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:47 PM GMT (Updated: 23 Feb 2021 10:47 PM GMT)

நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

நாமக்கல்:
நாமக்கல்லில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவித்திட வேண்டும். பணி ஓய்வு பெறுகின்றபோது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணகி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயக்கொடி, பொருளாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஒப்பாரி வைத்தனர்
இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து இருந்த அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மி அடித்தும், ஒப்பாரி வைத்தும் போராட தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
காலை 10 மணிக்கு தொடங்கிய இவர்களின் போராட்டம் மாலை வரை நீடித்தது.

Next Story