திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்


திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டம் கலெக்டர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Feb 2021 4:05 PM GMT (Updated: 24 Feb 2021 4:05 PM GMT)

திருப்போரூர் முருகன் கோவில் தேரோட்டத்தை கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்து கொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

திருப்போரூர், 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கணபதி ஹோமம், ஆறாம் கால பூஜை, அபிஷேக ஆராதனை போன்றவை நடைபெற்றது.

முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் காலை மற்றும் இரவு இருவேளையும் கிளி வாகனம், பூத வாகனம், வெள்ளி அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், தங்கமயில் வாகனம் பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனம் போன்றவற்றில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேரோட்டம்

அதனை தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது, முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கலெக்டர் ஜான் லூயிஸ் மற்றும் சிவாச்சாரியார்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

தேரோட்டத்தில் திருப்போரூர் எம்.எல்.ஏ. இதய வர்மன், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுகாதார பணிகளை திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வரும் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரியும், அன்று இரவு தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. 28-ந்தேதி திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் சக்திவேல், கோவில், மேலாளர் வெற்றிவேல் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story