சத்தி, புஞ்சைபுளியம்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்; 55 பேர் கைது


சத்தி, புஞ்சைபுளியம்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்; 55 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2021 9:44 PM GMT (Updated: 24 Feb 2021 9:44 PM GMT)

சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியிடங்களில் 5 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். இதில் தாலுகா செயலாளர் ராமதாஸ், சத்தியமங்கலம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் வாசுதேவன், மாவட்ட குழு உறுப்பினர் திருத்தணிகாசலம், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக மாற்றுத்திறனாளிகள் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 2-வது நாளாக சத்தி-கோவை தேசிய வட்டார பொறுப்பாளார் ராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதாக மாற்றுத்திறனாளிகள் 25 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் காந்திநகரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அந்தியூர்
அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சாவித்திரி தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Next Story