காரைக்காலில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது


காரைக்காலில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Feb 2021 3:39 PM GMT (Updated: 26 Feb 2021 3:42 PM GMT)

வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் இடும்பன்செட்டி ரோட்டைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர், நேற்று  தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. 
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கம் தேடிப்பார்த்தார். ஆனால் மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரைக்கால் காமராஜர் சாலை எஸ்.ஏ.நகரைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மோட்டார் சைக்கிளிலும் திருடு போயிருந்தது.

போலீசார் ரோந்து

இந்த இரு சம்பவங்கள் குறித்து காரைக்கால் நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

நேற்று மாலை காரைக்கால் மேற்கு புறவழிச்சாலையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததனர். 

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த இணையத்துல்லா (வயது 19), காரைக்கால் திருநகரை சேர்ந்த சந்தோஷ் (18) என்பதும், அவர்கள் அறிவழகன், ராஜன் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை திருடியும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டுபோன ஒரே நாளில் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடித்த 
போலீசாரை காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் ஆகியோர் பாராட்டினர்.

Next Story