மாசித்திருவிழா தேரோட்டம்


மாசித்திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2021 5:29 PM GMT (Updated: 26 Feb 2021 5:29 PM GMT)

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் :

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவில் நேற்று பூக்குழி இறங்குதல் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. 

அதன்படி நேற்று காலை 6 மணி அளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூக்குழி இறங்குதல் தொடங்கியது. இதனை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் தொடங்கி வைத்தனர்.

 அதைத்தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வரிசையாக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

பெண் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்திய படியும், ஆண் பக்தர்கள் கைகளில், தோள்களில் குழந்தைகளை சுமந்தபடியும் பூக்குழி இறங்கினர். சுமார் 3 ஆயிரம் பேர் பூக்குழி இறங்கியதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வர்த்தகர்கள் மண்டகப்படி சார்பில் மாலை 6 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. 

இதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், நகரின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். 

இந்த தேரோட்டம் ரதவீதிகள் வழியே வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

Next Story