பெரம்பலூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களை பூட்டி ‘சீல்’


பெரம்பலூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களை பூட்டி ‘சீல்’
x
தினத்தந்தி 26 Feb 2021 7:31 PM GMT (Updated: 26 Feb 2021 7:31 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்கள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

பெரம்பலூர்:

எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டப்பட்டன
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இதனால் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை படிப்படியாக பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அமல்படுத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
பெரம்பலூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் தாசில்தார் சின்னத்துரை தலைமையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதேபோல் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்படவில்லை. மேலும் கட்சி கொடிகளும், கம்பத்தில் பறந்த வண்ணம் உள்ளன. மேலும் அரசியல் கட்சியினரால் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை.
வேலை வாய்ப்பு முகாம் ரத்து
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெறவிருந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்தார்.

Next Story